Friday, August 17, 2007

கடவுளிடம் சில கேள்விகள்

கடவுள்!
ஒவ்வொரு மனிதனாலும்
சந்திக்கப்பட வேண்டியவர்!

பல கேள்விகள் என்னுள்,
என்றேனும் சந்தித்தால்
அவனோடு
விடை தேடிக் கொள்வேன்.

படைப்பதும் அழிப்பதும்
உன் செயலா?
ஆம் என்றால்
உனக்கு அதிகாரம்
கொடுத்தவர் யாரோ?

நானே பரம்பொருள்
நானே படைத்தவன்
சகல அதிகாரங்களும்
எனக்குத்தான் என்கிறாயோ?

சரி...
மனிதனுக்கு
மரணத்தை கொடுத்துவிட்டு
நீ மட்டும் ஏன்
சாகாவரம் எடுத்துக்கொண்டாய்?

பிறப்பு, இறப்பு
அழுகை, சிரிப்பு
மகிழ்ச்சி, சோகம்
நட்பு, காதல்
முதுமை, நோய்
பசி, வலி
கண்ணீர்......
ஒரு முறையேனும்
உணர்ந்திருக்கிறாயா?

மனிதனோடு ஒப்பிடாதே
நான் மனிதன் இல்லை
உணர்வுகள் கடந்தவன் நான்
என்கிறாயோ?

ஆம்.
அதுவும் சரிதான்
நீதான் மனிதனேயில்லையே!

கொலை செய்யாதே
என்று போதித்துவிட்டு
நீ மட்டும் ஏன்...?

ஒன்றைக் கொன்று
மற்றது உயிர் வாழட்டும்!
இதுதானே
உன் படைப்பின் இரகசியம்!
உயிர் என்பது
உனக்கு மனிதன் மட்டுமா?

உன் பெயரால் நடக்கும்
படுகொலைகள், கலவரங்கள்
பழி ஏற்க்கப் போவது யார்?

மனிதரின் செயலுக்கு
நானா பொறுப்பு என்கிறாயோ?

இன்னும் ஏன்
மறைந்தே வாழ்கிறாய்?
ஒருமுறை இங்கே வந்து
இந்த முட்டாள் மனிதர்க்கு
உண்மைகளை சொல்ல
ஏன் முடியவில்லை உன்னால்?

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்
உணவு கொடுக்கும் நீ
மனிதர்களை மட்டும் ஏன்
பசியில் இறக்க விட்டாய்?
பசி என்றால்
உனக்கு புரியுமா?

கடைசியாக....
மனிதர்களுக்கு தீர்ப்பு நாள்
நிர்ணயித்தது நீ என்றால்
உனக்கு தீர்ப்பு நாள்
யாரால், எப்போது?

No comments: