Tuesday, March 10, 2020

முதல் தூது

என் முதல் அழுகை -
உனக்காய் நான் அனுப்பிய 
முதல் தூது!

Tuesday, December 11, 2007

இது போதும்!

வந்த பசிக்கோர் பிடிசோறும்
வற்றாக் கலத்தில் ஒளி மதுவும்

அந்தம் நிறைந்த கவிதையும் என்
அருகில் நீயும் தேன்குரலும்

குந்தி இருக்க குளிர்நிலமும்
கூடி அமைந்தால் போதாவோ?

வெந்த பொட்டல் வெளியிதுவும்
வியன் பொன் உலகம் ஆகாதோ?

மன்னித்தோம்.......!

மானிடனை இம் மண்ணுக்குள்
மடக்கி அடைத்த பரம்பொருளே!

வானம் படைத்தாய் எனில் உள்ளே
வஞ்சப் பாம்பும் ஏன் வைத்தாய்?

ஆனால் பாவத் தழுத்தி உயிர்
அழுக்குப் பிடித்தோய் மன்னிப்பாய்

ஊனம் படைத்தாய் நீயன்றோ
உனை மன்னித்தோம் ஏற்றருள்வாய்!

விதி

எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்

தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்

வழுவிப் பின்னால் நீங்கியொரு
வார்த்தையேனும் மாற்றிடுமோ?

அழுத கண்ணீராறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

காலப் பறவை

வருவாய் நண்பா வண்ண மது
வாரிப் பருகி இரக்கமெனும்
நிரையப் போர்வையை இளவேனில்
நெருப்பினிலே இன்றே வீசிவிடு.

விரையும் காலப் பறவைக்கு
வீசிப் பறக்க மற்றிங்கே
ஒருகை அகலந்தான் அதற்குள்ளு
ஓகோ பறந்து விட்டதடா!

Sunday, September 2, 2007

நீ

இன்றிரவு
அழுதபோது
தெரிந்து கொள்கிறேன்..........

Saturday, August 25, 2007

ஒரு குட்டி தேவதை - 2

மின்சாரமில்லா
இரவுகளிலும்
உன் வீட்டில் மட்டும்
பௌர்ணமி வெளிச்சம்...
எப்படி?

ஓ..! மன்னித்து விடு...
அங்கு நிலா ஒன்று
பிறந்திருப்பதை மறந்துவிட்டேன்!

சிறகுகளில்லா வண்ணத்துப் பூச்சியே!
சின்ன சின்ன
உன் வர்ணங்களை
எங்கள் உயிர்களில் தெளித்தாயோ?
உனைக் காணும்
முகங்களிலெல்லாம் பொங்கும்
ரங்கோலி புன்னகைகள்!

இதழ்களை மெல்லத் திறந்து
காற்றோடு
அழகு மொழி பேசும்
பூக்கள் எல்லாம்
இன்று மூடிக் கொள்கின்றன!

சிவந்த இதழ்கள்
மெல்லத் திறந்து
நீ பூத்த புன்னகையில்
தோற்றுப் போனதால்!

ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்த
சின்ன ரோஜா மொட்டுக்கள்
தினமும் பயிற்சி செய்கின்றன...
உன் போல அழகாய்
கண் திறப்பதற்க்கு!

தூங்க வைக்கும்
தேவதைகள்
உன் கனவுகளில்
கதை சொல்வார்களோ?

தென்றலில் அசைந்து
தியானம் செய்யும்
அழகிய மலர் போல
நீ தொட்டிலில்
கண்மூடி தூங்கும்போது
சிறிதாய் கண்திறந்து
சின்ன இதழ்களை திறக்காமல்
மென்மையாய்
ஒரு புன்னகை செய்கிறாயே....
வார்த்தைகள் இல்லாத
கவிதை அது!

உயிர் பெற்று வந்த
கவிதையே...!
உனைப் பாட
வார்த்தைகள் இல்லாமல்
புதுமொழி தேடி
அலைகிறது.....
ஓர் கவிஞர் கூட்டம்!

தொட்டிலுக்குள் தூங்கும்
குட்டி நிலவு!

கண் சிமிட்டும்
விண்மீன் விழிகள்!

பஞ்சு மேகம் போல - இவள்
பிஞ்சு தேகம்!

எட்டி எட்டி உதைத்தத்தில்
தென்றல் பட்டுப் பட்டு - உன்
பட்டுப் பாதங்கள்
சிவந்தனவோ?

போதி மரம்
இனி வேண்டாம்!
இவள் நினைவுகளின் கீழ்
அமர்ந்தாலே போதும்...
ஞானம் பெறலாம்!

கங்கை நதியும்
இனி வேண்டாம்!
இவள் பஞ்சு விரல்களினால்
ஒரு தீண்டல் போதும்...
புனிதமாகி விடலாம்!